தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்தார். அண்மையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன், குரூஸ் புரத்தில் உள்ள உயிரிழந்த மாலுமி நிஷாந்த் வீட்டிற்கு நேரில் சென்று
அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மை தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் நிஷாந்தின் மனைவி சரோபின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கீதா ஜீவன் கூறுகையில்:
மாலுமி நிஷாந்த் உயிரிழந்து நான்கு நாட்களுக்கு மேலாகியும் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆறுதல் தெரிவிக்கவில்லை. இறந்த மாலுமியின் மனைவிக்கு அரசு வேலையும், அவரின் இரண்டு குழந்தைகளுக்கு நிதியுதவியும் வழங்க வேண்டும். மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறார்” என்றார்.
இதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி., ஒன்றிய வெளியுறவுத் துறை மூலம் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கப்பலில் இருந்த நிஷாந்தின் உடல், ஓமன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மாநகர மீனவர் அணி செயலாளர் டேனியல், வட்டச் செயலாளர் அல்பர்ட், முன்னாள் கவுன்சிலர் சாந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.